இலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில் வசிக்கும் வளரிளம் வயதினராகிய உங்களுக்கு டெங்குக் காய்ச்சல் உண்டாகும் சாத்தியம் அதிகம் உள்ளது. இதை உடனடியாகக் கவனிக்காவிட்டால் உங்களைச் சோர்வடையச் செய்வதுடன் உயிர் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக்கூடியது. டெங்குக் காய்ச்சல் என்பது டெங்கு வைரஸினால் ஏற்படும் ஒரு நோயாகும். அவற்றில் நான்கு வகைகள் உள்ளன. ஆயினும் அனைத்தும் ஒரே விதமானவையல்ல, அவை ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை. இவ்வைரஸ்கள் நுளம்பினால் பரவுவதன் காரணமாக கடும் காய்ச்சலும் உடல் வலியும் ஏற்படுகின்றது.

வைரஸினால் உண்டாகும் காய்ச்சல் என்றாலும் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் மரணத்தைக்கூட உண்டுபண்ணுவதால் சாதாரண வைரஸ் காய்ச்சலிலிருந்து வேறுபடுகின்றது. ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சல் நோயாளிக்கு தீவிர பிரச்சினைகள் எதனையும் ஏற்படுத்தாது. சில தினங்களுக்கு தொடர்ந்து காய்ச்சலையும் உடல் வலியையுமே ஏற்படுத்தும். டெங்கு கசிவு அறிகுறி (DENGUE LEAKAGE SYNDROME)மற்றும் டெங்கு இரத்தப்பெருக்கு (DENGUE HAEMORRHAGIC SYNDROME) அறிகுறி என அழைக்கப்படும் சிக்கலான நோய் அறிகுறிகள் உள்ளன.

பெரும்பாலானவர்களுக்கு டெங்கு நோயானது காய்ச்சலையும் உடல் வலியையுமே ஏற்படுத்துகின்றது. பலர் அந்த நோய் ஏற்பட்டுள்ளது என்பதைக்கூட உணர்ந்து கொள்வதில்லை. எவ்வாறாயினும், சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அது தீவிரமடைகின்றது. துரதிர்ஷ்டவசமாக நோயின் ஆரம்ப நிலையில் மருத்துவர்களால் நோய் ஏற்பட்டுள்ளதை கணிக்க முடிவதில்லை. ஆனால் இவ்விடயத்தில் காலம் தாழ்த்தாது சரியாக மருத்துவ உதவியைப் பெற்றால் நிலைமையைக் கட்டுப்படுத்தலாம்.

கடுமையான டெங்கு நோயின்போது நமது உடல் டெங்கு நோய்க்கு எதிராகக் கடுமையாக போராடுகின்றது. அதாவது உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸுக்கு எதிராக போராடுகின்றது. இதன்போதுதான் உங்களுக்கு கடும் காய்ச்சல் மற்றும் உடல் வலிகள் ஏற்படுகின்றன. இந்தப் போராட்டம் காரணமாக உங்கள் உடலின் கட்டமைப்பு பாதிக்கப்படலாம். உதாரணமாக குருதிச்சிறுதட்டுக்களும், வெண்குறுதித் துணிக்கைகளும் அழிக்கப்படலாம். குருதிச்சிறுதட்டுக்கள் இரத்தத்தை உறைய வைக்க அத்தியாவசியமானது. அத்துடன் குருதிச்சிறுதட்டுக்களின் குறைபாடு இரத்தக்கசிவுக்கு காரணமாகின்றது. காய்ச்சல் இறங்கிய பின் கிட்டத்தட்ட 48 மணித்தியாலங்களுக்கு கெபிலரிஸ் (capillaries) என்று அழைக்கப்படும் மிகச்சிறிய இரத்த நாளத்திலிருந்து இரத்தம் கசிகின்றது. இந்த இரத்தக் கசிவு இடம்பெறும்போது நீர் மற்றும் அல்புமின் எனப்படும் புரோட்டீன்கள் போன்ற சிறிய அணுக்கள் இரத்த நாளங்களிலிருந்து வெளியேறி மார்பு மற்றும் வயிற்றின் உற்குழிவு ஆகிய பகுதிகளுக்குச் சென்றுவிடுகிறது. இதன் காரணமாகவே இரத்தம் அதிகமாக கெட்டியாதல் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்ந வைரஸ் தாக்கம் காரணமாக நோயாளியின் இதயம், ஈரல், மூளை போன்ற பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சிறிய அளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது, அது சிக்கலின்றி ஐந்து முதல் 7 நாட்களுக்குள் குணமடைகின்றது. அவர்கள் உணவு உண்ண ஆரம்பிப்பதுடன் முற்றாகக் குணமடைகின்றனர்.

ஆனால் தீவிரமான டெங்கு காய்ச்சலின்போது எற்பட்டிருந்த காய்ச்சலின் வேகம் தணிந்தாலும் நோயாளி மிகவும் பலவீனத்துடனும், நோயுற்ற நிலையிலும் காணப்படுவார். தீவிரமான டெங்குக் காய்ச்சலின்போது இதுதான் மிக முக்கியமான அறிகுறியாகக் காணப்படும்.

அது வழக்கமாக 5 முதல் 7 நாட்களுக்குள் நிகழ்கின்றது. சில நேரங்களில் 3 நாட்களிலும் நிகழலாம். எனவே உங்களுக்கு காய்ச்சல் தணிந்த பின்னரும் நிலைமை மோசமாக காணப்படின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லவும்.

டெங்கு காய்ச்சல் பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் அல்லது வேறு இரத்த நோய்கள் உள்ளவர்களுக்கு தீவிர டெங்குக் காய்ச்சல் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

வைத்தியர்கள் அவர்களின் நோய் தீவிரத்தை கவனமாக அவதானித்து உடனடி சிகிச்சைகளை வழங்குவார்கள். தனியாக வாழும் மக்கள், க்ளினிக் அல்லது வைத்தியசாலைக்கு மிகத் தொலைவில் உள்ளவர்கள் கட்டாயம் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும். அந்த வகையில் சரியாக சிகிச்சையளிக்கப்பட்டால் கடும் சுகவீனமுற்ற நிலையிலிருந்து முற்றாகக் குணம்பெற முடியும்.

டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸை காவிச்செல்லும் நுளம்பினால் பரவுகிறது. இலங்கையின் உஷ்ணம் மற்றும் ஈரலிப்புக் காலநிலை டெங்கு வைரஸை காவிச்செல்லும் நுளம்புகளுக்கு சாதகமான நிலைமையை வழங்குகின்றது. பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பொறுப்பற்ற முறையில் வீசப்படும் கொள்கலன்கள் அல்லது சுத்தமான நீர் தேங்கியிருக்கும் இடங்கள் போன்றவை டெங்கு வைரஸை காவிச்செல்லும் நுளம்புகள் பெருகும் இடங்களாகும். சாக்கடைகள், குப்பை கொட்டும் இடங்கள், சதுப்பு நிலங்கள் அல்லது வேறு நுளம்புகள் பரவும் இடங்கள் போன்ற ஆரோக்கியமற்ற சூழலுக்கு அருகில் வசிப்பீர்களாயின் பெரும்பாலும் டெங்கு வைரஸினால் நீங்கள் பாதிக்கப்படக்கூடும்.

அறிகுறிகள் பெரும்பாலும் 4 - 7 நாட்களுக்குள் தோன்றும். ஆனால் நுளம்பு கடித்து 4 நாட்களுக்குப் பின்னர் கூட தோன்றக்கூடும். இவ்வறிகுறிகள் வழக்கமாக 5 - 7 நாட்களுக்குள் மறையக்கூடும்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடும். சிலருக்கு சாதாரணமாகவும் மற்றும் சிலருக்கு கடுமையாகவும் இருக்கும். அறிகுறிகள் பின்வருமாறு:

  • கடும் காய்ச்சல், சில நேரங்களில் நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்படும்.
  • தலைவலி
  • கண்களுக்குப் பின்னால் வலி
  • கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
  • களைப்பு - சிலவேளைகளில் இது பல நாட்கள், பல வாரங்களுக்கு நீடிக்கும்.
  • அரிப்பு - தட்டையான ஊதா நிறத்தில் கூறுகள் வடிவில் தடித்தல் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் சொறிவு - தடித்தல் போன்ற அறிகுறிகள் டெங்கு வைரஸால் பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படலாம்.
  • குமட்டல், வாந்தி, மற்றும் வயிற்றோட்டம் போன்றவை.
  • இருமல், தொண்டைப் புண் மற்றும் மூக்கடைப்பு
  • சருமத்தில் ஊதா நிறப் புள்ளிகள் தோன்றும் அல்லது மலம் கருமை நிறமாக இருக்கும்.
  • கண்கள் சிவக்கும்.

உங்களுக்கு முன்னர் டெங்கு நோய் ஏற்பட்டிருந்து, தற்போது வேறு டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பின், உங்களுக்குக் கடுமையான நோய் அறிகுறிகள் தோன்றும். தீவிரமான டெங்கு காய்ச்சலின்போது பின்வரும் அறிகுறிகள் தோன்றும்:

  • கடும் வயிற்று வலி
  • படுக்கையிலிருந்து எழும்போது மயக்கம்
  • தூக்க உணர்வு, கடும் பலவீனம்
  • வாந்தி மற்றும் உணவருந்த முடியாமை
  • போதுமான அளவு பானம் அருந்தினாலும் போதியளவு சிறுநீர் கழியாமை
  • நெஞ்சு வலி, மூச்செடுப்பதில் சிரமம்
  • அத்துடன் சருமத்தில் ஊதா நிறப் புள்ளிகள்
  • இரத்த வாந்தி
  • மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்
  • கருப்பு நிறத்தில் மலம் வெளியேரல்
  • கடும் தலைவலி மற்றும் வலிப்பு
  • மாதவிடாய் சுழற்சிக்கிடையில் இரத்தப்போக்கு

உங்களுக்குக் குளிருடன் கூடிய காய்ச்சல் மற்றும் கடும் உடல் வலியுடன் மேலே குறிப்பிட்டுள்ள நோய் அறிகுறிகள் ஏதாவது இருப்பின் உடனடியாக ஒரு மருத்துவரை நாடுங்கள்.

ஆம். உங்களுக்கு தோன்றும் நோய் அறிகுறிகளை அவதானித்து, உங்களுக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது என வைத்தியர் சந்தேகம் கொள்வாராயின் ஒரு மருத்துவப் பரிசோதனையை செய்து பார்க்க முடியும். அத்துடன் மருத்துவர் ஒரு இரத்தப் பரிசோதனையைச் செய்து டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கூறுவார். நீங்களாகவே கூட ஒரு இரத்தப் பரிசோதனை (Total Blood Count) செய்து பார்க்கலாம்.

இரத்தப் பரிசோதனையில் சாதாரண அளவைவிட உங்கள் வெள்ளை அணுக்களும் (White cell count) இரத்தச்சிறுதட்டுக்களும் (Platelet count) குறைவாக இருப்பதோடு, காய்ச்சலுடன் மேற்குறிப்பிட்ட ஏதாவது நோய் அறிகுறிகளும் தென்படுமாயின் அது டெங்குவாகத்தான் இருக்கும். எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்திய உதவியை நாடுங்கள்.

மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்தபின் உங்களுக்கு கடும் டெங்குக் காய்ச்சல் உள்ளது என்பதை உறுதி செய்வாராயின், நீங்கள் தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலைக்கு வந்தால் மட்டுமே அவரால் சிகிச்சையளிக்க முடியும். இலங்கையில் பெரும்பாலும் டெங்கு தொடர்பான மரணங்கள் ஏற்படக் காலதாமதமாக வைத்தியசாலைக்கு வருவதே காரணமாகும்.

டெங்கு நோய் வைரஸுக்கான சிகிச்சை எதுவுமில்லை, ஆனால் வைத்தியர்களால் நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். கடும் சுகவீனமுற்ற நோயாளிகள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறலாம்.

சிகிச்சையில் அடங்குபவை:

  • காய்ச்சல், வாந்தி மற்றும் உடல் வலிக்கான மருந்துகள்
  • சேலைன் மூலம் மருந்துகளை வழங்குதல்
  • இரத்தம் ஏற்றுதல் - நோய்த்தொற்று காரணமாக கடும் இரத்தப்போக்கு ஏற்படின் வேறொருவர் தானம் செய்த இரத்தத்தினை வைத்தியரால் உங்களுக்கு வழங்க முடியும்.

சாதாரண டெங்கு காய்ச்சலின்போது நோயாளிக்கு கடும் சுகவீனம் ஏதுமில்லை என வைத்தியர் முடிவு செய்வாராயின் நோயாளி வீட்டிலிருந்தே ஓய்வெடுக்கலாம்.

உங்களுக்கு டெங்கு நோய் இருக்குமானால் நீங்கள் குணமாகும் வரை தினமும் வைத்தியரை அல்லது தாதியை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். வைத்தியர் அல்லது தாதி இரத்தப் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பரிசோதிப்பர். இந்த இரத்தப் பரிசோதனைகள் மிகவும் முக்கியமானவையாகும் ஏனெனில் டெங்கு காய்ச்சல் திடீரென தீவரமடையலாம்.

உங்களுக்கு இவ்வாறான சிக்கல்கள் எழுந்தால் வைத்தியர் உங்களை நன்கு அவதானித்து நேர காலத்துடன் சிகிச்சை அளிப்பார்.

உங்கள் வைத்தியர் உங்களை வைத்தியசாலைக்கு செல்லத் தேவையில்லை நீங்கள் வீட்டிலிருந்து நன்கு ஓய்வெடுப்பதுடன் போதுமான அளவு பானங்களை அருந்துமாறு கூறலாம். நீங்கள் காய்ச்சல் மற்றும் வலி தணிவதற்கு பரசிட்டமோல் எடுக்கலாம்.

அஸ்பிரின் அல்லது NSAID மருந்துகள் மற்றும் இபுருபீன், டிக்லோபெனக் சோடியம் அல்லது நெப்ரொக்ஸென் போன்ற மருந்துகளை எடுக்கக்கூடாது. இம்மருந்துகளை எடுப்பதால் டெங்கு நோயாளிகளுக்கு இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும். இதை எப்பொழுதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு கடுமையான உடல் வலி ஏற்படும்போது நீங்கள் இம்மருந்துகளை எடுக்கத் தூண்டப்படுவீர்கள். NSAID மருந்துகள் சிறந்த வலி நிவாரணிகளாக இருக்கலாம். ஆனால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கும்போது அதை ஒருபோதும் பாவிக்கக்கூடாது.

டெங்கு நோய் தவிர்க்கலாம். ஆனால் இந்நோயை தவிர்க்க சிறந்த வழி, இந்நோயை ஏற்படுத்தும் நுளம்புகளை ஒழிப்பதே ஆகும். இதுவரை டெங்குக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அந்நோய் தொற்றாமல் தவிர்க்கலாம்.

  • பகல் பொழுதில் அதாவது டெங்கு வைரஸை காவிச்செல்லும் நுளம்புகளின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படும் நேரங்களில் வீட்டினுள் தங்கியிருங்கள். அவை பொதுவாக காலை நேரத்திலும் அந்தி சாயும் நேரங்களிலுமே கடிக்கக்கூடியன.
  • வெளியில் செல்லும்போது சப்பாத்து, நீண்ட கை சட்டை, நீண்ட காற்சட்டைகளையே அணியுங்கள்.
  • நீங்கள் வெளியில் செல்லும்போது நுளம்புகளை துரத்தக்கூடிய ஸ்பிரே அல்லது கிரீம்களை பயன்படுத்துங்கள். அவற்றைப் பாவிக்க முன் அதன் லேபலில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளையும், பாவனை முறையையும் வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • உங்கள் வீட்டுக்கு அருகில் நீர் தேங்கியிருக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். டெங்கு நுளம்புகள் சுத்தமான நீரிலேயே பெருகுகின்றன. உங்கள் நீர் வடிகால், கூரைப் பீலி என்பவற்றைப் பரிசோதியுங்கள். பூச்சாடி மற்றும் எறும்புப் புற்றில் தேங்கும் நீரில்கூட நுளம்புகள் பெருகும். எனவே அத்தகைய இடங்களில் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

குப்பைகளை அகற்றுவதில் கவனமாயிருங்கள். மற்றும் பொறுப்புணர்வுடன் டெங்கு நோயை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைத்து மக்களினதும் கடமையாகும். நமது தேசத்திலிருந்து டெங்கு நோயை முற்றாக ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.

FaLang translation system by Faboba